பிரண்டைக்கொடி மூணு இஞ்ச் நீளம், ஒரு கணு, அதில் இருமருங்கும் இலைகள், இலைகள் புறப்படும் இடத்திலிருந்து கொடிவீசும் சல்லி வேர்கள் என நீண்டு நீண்டு போகும். சின்னப் பூவாய் வெள்ளையாயப் பூக்கும். சிறு கறிவேப்பிலைக் காய் தரத்தில் காய்த்துக் கறுப்பாக பழுக்கும். கொடியின் மூட்டில் கரும்பச்சை நிறமாகவும் தும்புப் பகுதியில் வெளிர் பச்சை நிறமாகவும் இருக்கும். பிரண்டையில் பலவகை உண்டு. பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என நான்கு இனங்கள் உள்ளதாக பதார்த்த குண சிந்தாமணி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரண்டையில் நான்கு பட்டையுடைய சதுரப் பிரண்டையே, பெரும்பாலும் எங்கும் வளர்ந்து காணப்படும். இது தவிர முப்பிரண்டை, ஓலைபிரண்டை, கணிப்பிரண்டை, உருளைப் பிரண்டை புளிப்பிரண்டை. போன்ற பல பிரண்டை இனங்கள் உள்ளன. பிரண்டையின் அடிப்படை மருத்துவ குணங்கள் 70 சதவீதம் எல்லா பிரண்டை வகைக்கும் உண்டு.
இதனோடு அப்பிரண்டையின் புளிப்பு சுவைக்கேற்ப புளிப்பிரண்டை லேசான தீஞ்சைவக்கேற்ப தீம்பிரண்டை என அப்பிரண்டையின் காரணத்தை ஒட்டிப் பெயர் பெற்றுள்ளன. மூன்று பட்டையுள்ள முப்பிரண்டை அரிய பிரண்டையாகும். இதனை காயகற்ப மூலிகை என அழைப்பர். இதனைச் சித்தர்கள் மருந்துடன் பயன்படுத்தி காயசித்தி அடைந்தார்கள்.
சாதாரண பிரண்டையை நெய்யில் வறுத்து உண்டால் மூலத்தினவு, மூல ரத்தம், மாந்தம், வயிறு, வாய்பு, அதிசாரம், கபம், இரத்தப்போக்கு, ஓய்ந்த நடை ஆகியவை போகும்.
களிப்பிரண்டையால் ஐயம், பித்தம், கரப்பான், சிலந்திக்கடியும் போகும்.
தீம்பிரண்டையால் செரியா மந்தம், சீதக்கட்டு, இரைப்பு வீக்கம், விக்கல் ஐயம் வாதமும் போகும்.
புளிப்பிரண்டையால் பாண்டு, மார்பு நோய், குன்மம், கபமும் போகும். சூடு உண்டாகும்.
பிரண்டைத் துவையல்
பிரண்டையின் நுனியில் வளர்ந்து வரும் மெல்லிய தண்டுகளைப் பறித்து, கழுவிக்கொள்ளவும், கடாயில் பசு நெய்யை லேசாக உள்விட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். பிறகு உப்பு, புளி சேர்த்துத் துவையல் செய்து சாப்பாட்டில் பிசைந்தோ அல்லது தொட்டுக்கொண்டே உண்ணலாம். இதனால் நாவில் ஏற்படும் சுவையின்மை நீக்கி, நன்கு பசியெடுக்கும். வயிறு இரைத்தல், விக்கல், கொட்டாவி அவ்வப்போது விடுதல், உடல் வெளுப்பு, வயிற்று வலி, நெஞ்சக நோய்கள் போன்றவை தீரும்.
பிரண்டையை நெய்விட்டு வதக்கி அதனை நன்கு மசிய அரைத்து 48 நாட்கள் வெறும் வயிற்றில் சிறிய நெல்லிக்காய் அளவு காலை, மாலை சாப்பிட்டு வர மலம் போகின்ற ஆசன வாய் எரிச்சலும், இரத்த மூலமும் தீரும். பிரண்டையை எரித்து அதன் சாம்பலை தண்ணீரில் கரைக்கவேண்டும். பிறகு தெளிவினை இறுத்து மீண்டும் எரித்தால் பாத்திரத்தில் உப்பு தங்கும். இதுவே பிரண்டை உப்பு ஆகும். இந்த பிரண்டை உப்பு எண்ணற்ற மருத்துவ குணம் கொண்டது.
பிரண்டை உப்பை மிளகளவு வெண்ணெய்யில் கலந்து காலை நேரத்தில் உண்பதால் வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்கில் ஏற்படும் பித்த வெடிப்பு, உதட்டு வெடிப்பு இவை குணமாகும். மேலும் பிரண்டை உப்பை மிளகளவு பாலில் கலந்து சிறு குழந்தையின் உடல் எடைக்குத் தகந்தபடி தர வாந்தி, சீதபேதி நுரையுடன் கூடிய பச்சையாக மலம் போவது, பசியற்று இருப்பது போன்ற நோய்களைத் தீர்க்கும் இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட பிரண்டையை மதிக்காமல் நிலத்தடி நீரை உறிஞ்சும் வேலி காத்தானை பராமரித்து வருகிறோம். அதே வேளையில் மருத்துவ குணம் கொண்ட பிரண்டையை முள்ளோடு முள்ளாகப் பார்த்து வருகிறோம். இனிமேலாவது பிரண்டையின் குணத்தையும், மருத்துவப் பயனையும் அறிந்து உணவோடு பிரண்டை உண்போம்.
No comments:
Post a Comment