Thursday, 5 December 2019

முள்ளங்கி கீரையின் பலன்கள்! - Uses of Radish!


முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்ட‌வை. இப்போது முள்ளங்கிக் கீரையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

முள்ளங்கிக் கிழங்கின் மேல் பக்கம் தழைத்து வளர்ந்திருக்கும் இலைகளைதான் முள்ளங்கிக் கீரை என்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் முள்ளங்கியை மட்டும் பயன்படுத்திவிட்டு, அதன் கீரையை அலட்சியம் செய்துவிடுகிறோம்.  ஆனால், முள்ளங்கிக் கிழங்கைவிட அதன் கீரையில்தான் ஏராளமான‌ மருத்துவக் குணங்கள் உள்ளன‌!






முள்ளங்கிக் கீரையின் பலன்களும், பயன்படுத்தும் முறைகளும்:

பொதுவாக முள்ளங்கிக் கீரையை மற்ற கீரைகளைப் போலவே சமைத்து சாப்பிடலாம். ஆனால் எந்தக் கீரையானாலும் அதன் பசுமை நிறம் மாறாத அளவுக்கு மட்டுமே வேகவைக்க வேண்டும். முள்ளங்கிக் கீரையை சமைக்காமல் மெல்லிய துண்டுகளாக்கி பச்சையாக சாலட் போலவும் சாப்பிடலாம். முள்ளங்கிக் கிழங்கைப் போன்றே அதன் கீரையும் இரைப்பைக் கோளாறுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு போன்றவைகளையும் குணப்படுத்துகின்றன.

# தொடர்ந்து மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

# முள்ளங்கிக் கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவைமெட்டுக்கள் தூண்டப்பட்டு நாக்கின் சுவையின்மை பிரச்சினையை போக்கும்.

# இருதயத்திற்கும் பலம் சேர்க்கக்கூடியதாக உள்ளதால் இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஓரிரு முறையாவது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

# முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.

# முள்ள‌ங்கிக் கீரையின் சாற்றை 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் கீரை சாப்பிட விரும்பினால், முள்ளங்கிக் கீரையை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

# சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும். மேலும் சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும்.

# கற்களால் உண்டாகும் நீர் அடைப்பு மற்றும் வெள்ளையால் வரும் நீர் அடைப்பிற்கு முள்ளங்கிக் கீரையின் கொழுந்து இலைகளாக 2 கைப்பிடியளவு எடுத்து 1 சிட்டிகை கல் உப்பு சேர்த்து அரைத்து நீரில் கலக்கி தினமும் 2 முறை குடித்து வந்தால் குணம் கிடைக்கும். நீர்க்கடுப்பிற்கும் இதுப்போல் செய்தால் குணமாகும்.

# பசியின்மைக்கு முள்ளங்கிக் கீரையில் சாறெடுத்து, அந்த சாற்றில் ஊற வைத்த மிளகைப் பொடியாக்கி, அதிகாலையில் 1/2 ஸ்பூன் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் ஜீரண சக்தி ஏற்பட்டு நன்றாக பசி உண்டாகும்.

# தொடர் வயிற்றுவலிக்கு வெந்தயம் ஊற வைத்த 1/2 டம்ளர் தண்ணீரில் 1 பிடி முள்ளங்கிக் கீரையை அரைத்துச் சாப்பிட்டால் குணமாகும்.

# கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடுவதால் நோயின் தாக்கம் குறைவதை நன்கு உணரமுடியும். கல்லீரல் நோய்களுக்கு முள்ளங்கிக் கீரை சாற்றுடன் சிறிது வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.

# முள்ளங்கீரைச் சாறில் நெருஞ்சில் முள்ளை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் விந்து உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

# சுறுசுறுப்பின்றி படிப்பிலும் அன்றாட செயல்பாடுகளிலும் மந்தமாக உள்ள குழந்தைகளுக்கு இதை ஏதாவது ஒரு வகையில் செய்துக் கொடுத்தால் மந்தகுணம் நீங்கும். குழந்தைகள் உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கிக் கிழங்குடன் முள்ளங்கிக் கீரையையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொடுக்கலாம்.

# சிகப்பு முள்ளங்கியின் கீரையை நிழலில் காயவைத்து நன்கு ஈரமில்லாமல் காய்ந்தவுடன் அதை ஒரு மண் சட்டில் போட்டு எரித்து சாம்பலாக்கி, ஈரமில்லாத, சுத்தமான ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். தேவைப்படும்போது அந்த சாம்பலில் சிறிது எடுத்து விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து, ஒரு வெள்ளைத் துணியில் தொட்டு பாலுண்ணி உள்ள இடங்களில் போட்டு வந்தால் சில தினங்களில் குணமாகும்.


இதுவரை முள்ளங்கிக் கீரை எவ்வாறெல்லாம் நமக்கு பயன்படுகிறது என்பதையும் அவற்றை மருந்தாக பயன்படுத்துவது எவ்வாறு என்பதையும் பார்த்தோம். அதை பலவிதமாக சமைத்து உண்டும் அதன் பயன்க‌ளை அடையுங்கள்.

No comments:

Post a Comment